புத்தளம், பாலாவி – கற்பிட்டி வீதியில் நேற்று (20) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழத்துள்ளார்.பாலாவி பகுதியைச் சேர்ந்த அபூதாலிப் பாத்திமா ரிஸானா (வயது 40) எனும் ஒரு பிள்ளையின் தாயே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,பாலாவி ஊடாக கற்பிட்டி நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள் பவுசர் ஒன்று, வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த குறித்த பெண் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில் குறித்த பெண் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டதுடன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.உயிழந்த பெண்ணின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சம்பவ இடத்திலும், வைத்தியசாலையிலும் மரண விசாரணையை நடத்தினார்.இந்த விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.