மொனராகலையில் தணமல்வில, ஹம்பேகமுவ பிரதேசத்தில் மருமகனால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாமனார் நேற்று (05) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் தணமல்வில, ஹம்பேகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார்.இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான மருமகன் தனது மனைவியுடன் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மாமனார், சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்று இது குறித்து விசாரித்துள்ளார்.இதன்போது சந்தேக நபருக்கும் மாமனாருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது சந்தேக நபர் தனது மாமனாரை பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த மாமனார் எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாமனார் மீண்டும் எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து, பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.30 வயதுடைய மருமகனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.