பெண் ஆர்வலர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு உயர் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது.இதனையடுத்து, குறித்த தரப்புகள் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பெண்கள் எந்தவொரு உரிமம் பெற்ற விற்பனை நிலையத்திலிருந்தும் மதுபானம் கொள்வனவு செய்யவும், மதுபான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் பணிபுரியவும், சில்லறை விற்பனை நிலையங்களில் மதுபானம் அருந்தவும் அனுமதிக்கும் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம் முன்னைய வர்த்தமானி திருத்தியமைக்கப்பட்டுள்ளது.இதன்படி, இலங்கை சட்டம் இப்போது மதுபான விற்பனை, உற்பத்தி மற்றும் நுகர்வு தொடர்பாகப் பெண்களுக்குச் சம உரிமைகளை அங்கீகரிக்கிறது என்று உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.இந்தநிலையில், முன்னைய கட்டுப்பாடுகளை ரத்து செய்து புதிய வர்த்தமானியை அரசு வெளியிட்டுள்ளமையால், தமது மனுவைத் தொடர விரும்பவில்லை என்று மனுதாரர்கள் தரப்பு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
அதன்படி, நீதியரசர்களான எஸ். துரைராஜா, மஹிந்த சமயவர்தன மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வு மனுவைத் தள்ளுபடி செய்ய முடிவு செய்தது.முன்னதாக, மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் இடத்தில் பெண்கள் சட்டப்பூர்வமாக பணியமர்த்தப்படுவதைத் தடுக்கும் வர்த்தமானி அறிவிப்புக்கு இடைக்கால தடையுத்தரவைக் கோரி அடிப்படை உரிமைகள் மனுவைத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2018 ஆம் ஆம் ஜூலை 9 ஆம் திகதி, அது தொடர்பான விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.