மதுபோதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தை செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவர் நுவரெலியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.நுவரெலியா – சீதாஎலிய பகுதியில் குறித்த பேருந்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டபோது அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.திவுலபிட்டிய பேருந்து சாலைக்கு சொந்தமான இந்த பேருந்து வெலிமடையிலிருந்து நுவரெலியா வழியாக நீர்கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.இந்தநிலையில், குறித்த பேருந்தில் பயணித்தவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.அதன்போது, சாரதியின் இருக்கைக்கு பின்னால் இருந்து சட்டவிரோத மதுபானம் அடங்கிய போத்தலொன்றையும் காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.இதனையடுத்து, பேருந்தின் பயணிகள் மற்றொரு பேருந்தில் பாதுகாப்பாக அனுப்பப்பட்டதாகவும், கைதுசெய்யப்பட்ட சாரதி மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.