வவுனியா மதவுவைத்தகுளத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்தியநிலையத்தை வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (13) பார்வையிட்டிருந்தார்.கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வவுனியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை முதலிட்டு அமைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையம் இதுவரை இயங்காமல் உள்ளது.இந்நிலையில் அதனை இயங்கச்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அதற்கான முன் ஆயத்த பணிகளை அமைச்சர் இன்று பார்வையிட்டிருந்தார்.இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,பலமில்லியன் ரூபாய் பணம்இந்த பொருளாதார மத்தியநிலையத்தில் செலவிடப்பட்டுள்ளது. எனவே இம்மாத இறுதிக்குள் இதில் செய்யவேண்டிய திருத்தப்பணிகளை செய்துவிட்டு எதிர்வரும் மாதம் முற்பகுதிக்குள் அதனை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் ஏற்கனவே வவுனியா மொத்தவியாபார சந்தையில் உள்ள 35 வியாபாரிகளுக்கு மத்தியநிலையத்தில் உள்ள கடைகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மிகுதி 15 கடைகள் விவசாய அமைப்புக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
அத்துடன் மன்னாரில் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. எனவே அந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வர முடியும்.அந்த திட்டத்தில் தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளனவா என்பது தொடர்பாக ஆராயவேண்டும். அபிவிருத்தி பணிகளையும் மக்களுக்கு செய்யவேண்டிய தேவை உள்ளது. நாட்டில் மின்சாரம் தொடர்பாக பல பிரச்சனைகள் உள்ளது. அதனை நிவர்த்திசெய்யவேண்டும். எனவே மக்களின் எதிர்ப்பினையும் கருத்தில் எடுத்து அந்த திட்டம் தொடர்பான முடிவு அறிவிக்கப்படும்.சுப்ரீம்செற் செயற்கைகோள் தொடர்பாக அரசாங்கத்திற்குள் பிரச்சனையை ஏற்ப்படுத்த சிலர் முனைகின்றார்கள்.அப்படி எவராலும் செய்யமுடியாது.உத்தியோகத்தர்கள் வழங்கிய பிழையான தகவல்களின் அடிப்படையிலேயே பிரதமர் அந்த விடயத்தை கூறியிருந்தார். பிழையான தகவல்களை வழங்கியவர்களே இதற்கான பொறுப்பை ஏற்க்கவேண்டும். அதனை சரிசெய்ய வேண்டியது எமது பொறுப்பு. அதனாலேயே நான் அவ்வாறு கூறியிருந்தேன். அத்துடன் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்ப்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்திற்குள் எந்தவிதமான பேச்சும் இல்லை என தெரிவித்தார்.குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன் ,பிரதேச செயலாளர் இ.பிரதாபன், மற்றும் அமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், தேசியமக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.