இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிராக ஊழியர்கள் தொடங்கிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நாளை நள்ளிரவு வரை தொடர மின்சார தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.இலங்கை மின்சார சபை மறுசீரமைப்புக்கு எதிராக மின்சார தொழிற்சங்கங்கள் கடந்த 4 ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இரண்டு நாள் சுகயீன விடுப்பு போராட்டத்திலும் குழுக்களாக ஈடுபட்டு, 2வது நாளாக மின்சார சபையின் தலைமையகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதிய மின்சார சபைச் சட்டத்தின் பாதகமான விளைவுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம் என்று மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு அறிக்கை அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இதற்கிடையில், மின்சார தொழிலாளர்களின் சலுகைகளைக் குறைக்க தற்போதைய அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.