நுவரெலியா – அக்கரப்பத்தனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் மாணவி ஒருவர் வாய்த்தாடையில் பாதிப்பு ஏற்படும் அளவிற்கு ஆசியரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.அக்கரப்பத்தனை பகுதியில் உள்ள குறித்த பாடசாலையில் கல்வி பொது தராதர சாதாரண தரம் பயிலும் பிரஸ்டன் தோட்டப்பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் ஆசிரியர் இன்றைய தினம் அக்கரப்பத்தனை காவல்துறை நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அக்கரப்பத்தனை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை நுவரெலியா வலய கல்வி பணிமனையை தொடர்பு கொண்டு வினவியது.இதற்கு பதிலளித்த அதன் அதிகாரி ஒருவர், குறித்த விடயம் தொடர்பாக கல்வி திணைக்களத்தின் ஊடாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்தார்.