செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI) அசுர வளர்ச்சி, பல துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான தகவல் தொழில்நுட்ப (IT) துறைக்கும் அது ஒரு பெரிய சவாலாக உருவாகி வருகிறது. குறிப்பாக, சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சேவைகளின் பயன்பாடு, அடுத்த சில ஆண்டுகளில் இந்திய ஐடி துறையின் வருவாயைக் கடுமையாகப் பாதிக்கும் என்று ஒரு ஆய்வறிக்கை எச்சரித்தும் இருந்தது.சாட்ஜிபிடியால் செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் குறியீடுகளை எழுதுவது, பிழைகளைச் சரிசெய்வது, எளிய தரவு பகுப்பாய்வு போன்ற பணிகளைத் திறம்படச் செய்ய முடியும்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிய துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறாக பல துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஏ.ஐ. தொழில்நுட்பம் தற்போது மனித உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அமெரிக்காவில் சாட்ஜிபிடி உடனான உரையாடல்களுக்கு பிறகு 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி பெற்றோர் ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.ஆடம்ரெய்ன் என்ற 16 வயது சிறுவன், உயிரை மாய்த்துக்கொள்வது குறித்த சாட்ஜிபிடி உடன் விவாதித்த போது அதற்கு பதிலளிக்க மறுக்காமல் அதற்கான எண்ணங்களை சாட்ஜிபிடி மேலும் தூண்டியதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா உயர் நீதிமன்றத்தில் தவறான மரணம், வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் சாட்ஜிபிடி உடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து எச்சரிக்கத் தவறியதற்காக ஓபன்ஏஐ மீது 40 பக்க அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.