Home » யாழ். ஏ-9 வீதியை மறித்து மக்கள் போராட்டம்

யாழ். ஏ-9 வீதியை மறித்து மக்கள் போராட்டம்

by newsteam
0 comments
யாழ். ஏ-9 வீதியை மறித்து மக்கள் போராட்டம்
15

அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.தமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் இன்றைய தினம் (08) அரியாலை கிழக்கு பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் போராட்ட இடத்திற்கு வரவேண்டும் எனக் கோரி வீதியை மறித்தனர்.இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் போராட்ட இடத்திற்கு வந்தார்.இதன்போது மக்கள் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

“குறித்த பகுதியில் இனிமேல் குப்பை கொட்டுவதற்கு வாகனங்கள் வந்தால், அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என எச்சரிக்கை விடுத்தனர்.பின்னர், தவிசாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்று ஆளுநர் செயலகத்தில் மற்றொரு மகஜரைக் கையளித்தனர். இது தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது:

“உலகெங்கிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மக்கள் போராடி வருகின்றனர். அரியாலை மக்களாகிய நாமும் நமது ஊரைப் பாதுகாப்பதற்காக, நமது அழகிய ஊரின் நிலம், கடல், நீர்வளம், தூய காற்று போன்ற இயற்கையின் கொடைகளைக் காப்பாற்றுவதற்காகப் போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நல்லூர் பிரதேச சபை, எமது ஊர் மக்களுடன் எவ்வித கலந்துரையாடலும் நடத்தாமல், சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடிய குப்பைகளை எமது ஊரில் கொட்டும் திட்டத்தை ஆரம்பித்திருப்பது, எமது மக்களால் மட்டுமல்ல, இயற்கையையும் மனிதத்தையும் நேசிக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும். ‘இயற்கைப் பசளை உற்பத்தி’ என்ற பெயரில், வகைப்படுத்தப்படாத, மக்காத குப்பைகளை எமது ஊரில் கொட்டி, எமது ஊரை குப்பை மேடாக மாற்றும் முயற்சியை நல்லூர் பிரதேச சபை உடனடியாகக் கைவிட வேண்டும். எமது இயற்கை வளங்கள் இன்றைய தலைமுறைக்கு மட்டுமானவை அல்ல, எதிர்கால தலைமுறைக்கும் உரிமையானவை. எமது ஊரின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு நமது தலைமுறைக்கு உள்ளது. எனவே, மக்களுக்கும் இயற்கைக்கும் விரோதமான இந்த குப்பை மேடு திட்டத்தைக் கண்டித்து, அதனைக் கைவிடக் கோரி, எதிர்வரும் 8ஆம் திகதி மக்கள் அணிதிரள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.”

mc39

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version